கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சதீஷ்குமார் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் தி.மு.கவை சேர்ந்த ஒன்றிய செயலாளர் முரளிதரனும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அணுஉலை முற்றுகை, அடையாள உண்ணாவிரதம், கடல்நீரில் மனித சங்கிலி என கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுப் பெற்று வருகிறது. கூடங்குளம் மற்றும் இடிந்தகரை மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சதீஷ்குமாரை, சென்னையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் திருநெல்வேலியில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட சதீஷ்குமார், அப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருடன், அணு உலை எதிர்ப்பு மக்கள் இயக்கத்தை சேர்ந்த முகிலனும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுமார் மூன்று மாதம் சிறையில் இருந்த சதீஷ்குமர் தற்போது பிணையில் வெளிவந்துள்ளார்.
இந்த நிலையில் சதீஷ்குமார் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுஇடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்வது, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சதீஷ்குமார் மற்றும் தி.மு.க வை சேர்ந்த சாத்தூர் ஒன்றியச் செயலாளர் முரளிதரன் ஆகியோர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
*News from puthiyathalaimurai.tv(14 September 2012 )
0 comments:
Post a Comment